Sunday 27 April 2014

Brief Spacialities Temples

porpanai kottai bairavar
புதுகோட்டைக்கு அருகில் உள்ள பொற்பனைக் கோட்டை என்ற ஊரில் உள்ள ' பைரவர் கோவிலில் பைரவரின் உருவம் பத்து அடிக்கு மேல் உயரமுள்ளது. பைரவருக்கு ஏணி மீது ஏறியே தினமும் அபிஷேக வழிபாடு நடைபெறுகிறது. இவருக்கு வெள்ளிக் கிழமை சந்தனக் காப்பும், வடை மாலையும் சாத்துகின்றனர். 


சிவன் கையில் சக்கரம்!

பெருமாளுக்குரிய சக்கரத்தை சிவனும் வைத்திருக்கிறார்! இதைக் காண வேண்டுமானால் திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள திருவிற்குடி  மயானேஸ்வரர் கோயிலுக்குச் செல்ல வேண்டும். சிவன் எட்டு வீரச் செயல்கள் நிகழ்த்திய அஷ்ட வீரட்டத் தலங்களில் இது ஒன்று. இங்கு சலந்தராசுரனை சக்கர ஆயுதத்தால் சிவன் அழித்தார். இங்கு எழுந்தருளியிருக்கும் சிவனின் திருநாமம் திருமயானேஸ்வரர். அம்மன், பரிமள நாயகி. உற்சவரின் திருக்கரங்களில் சக்கரம் உள்ளது. இங்கு முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு, மயில் மீது தேவியருடன் அமர்ந்து கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

ஒரே ஆலயத்தில் பஞ்சபூதங்கள்

பஞ்ச பூதத் தலங்களின் சங்கமமாக ஐந்து சிவ சந்நதிகள் கொண்ட அபூர்வ ஆலயம் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த 'கொண் டாபுரம்' கிராமத்திலுள்ளது. பஞ்ச பூத நாயகனாக, சர்வேஸ்வரனாக வழிபடப்படும் இறைவன், 'பஞ்சலிங்கேஸ்வரர்' என்றழைக்கப்படுகிறார். 

பாறாங்கல் கோயில் 

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் முழுவதும் பாறாங்கல்லால் கட்டப்பட்டிருக்கிறது. இங்குள்ள லிங்கத்தின் பீடம் மட்டும் 40 அடி நீளம். ஆவுடையாருக்கும், லிங்கத்திற்கும் உடுத்த வேண்டிய வேட்டி, துண்டை தனித்தனியாக நெய்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத பவுர்ணமி நாள், மதிய வேளையில், இறைவனுக்கு மாபெரும் அன்ன அபிஷேகம் நடைபெறுகிறது. இப்படிச் செய்தால் மக்கள் அவ்வருடம் முழுவதும் பசியால் வாடாமல் இருப்பார்கள் என்பது நம்பிக்கை. அபிஷேகம் செய்த அன்னத்தை தயிர் சாதமாகக் கலந்து பக்தர்களுக்கு  பிரசாதமாக வழங்குகிறார்கள்.

குழந்தை வரம் தரும் க்ஷேத்திர பாலகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சக்கரத்தாழ்வார் சந்நதி முன்பு ஒரு பெரிய கல் நடப்பட்டுள்ளது. இதை 'க்ஷேத்திர பாலகர்' என்கிறார்கள்; தங்கள் காவல் தெய்வமாக வணங்குகிறார்கள். இவரை வணங்கினால் மகப்பேறு வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

விதவிதமாகக் கொண்டைகள் 

விருத்தாசலத்திற்கு அருகே ஸ்ரீமுஷ்ணம், பூவராக சுவாமி திருக்கோயிலிலுள்ள 16 கால் மண்டபத்தில் ஒவ்வொரு தூணிலும் நாட்டியப் பெண்ணின் சிற்பங்கள் உள்ளன. ஒவ்வொரு பெண்ணும் தனித்தனியே நாயக்கர் கொண்டை, ஆண்டாள் கொண்டை என பலவித கொண்டை அலங்காரத்தில் காட்சியளிக்கிறார்கள். 

No comments:

Post a Comment