Saturday 26 April 2014

Murugan Joined The Broken Bones -Pamban Swamikal

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் (1850-1929) முருகப் பெருமான் ஒருவரையே முழு முதற் கடவுளாக வழிபட்டவர். மக்கள் துன்ப நீக்கமும், இன்ப ஆக்கமும் பெற வேண்டுமென்ற கருணை உள்ளத்தால் சாத்திரமாகவும், தோத்திர மாகவும் 6666 பாடல்களையும், 32 கட்டுரைகளையும் அருளியவர்.
உலக மக்கள் அறியாமையிலிருந்தும், விலங்கு உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு பண்பட்ட அன்புள்ளத்தோடு அறவாழ்க்கையைக் கடைப்பிடித்து, சாந்த சீலர்களாய், ஒழுக்கமுள்ள உத்தமர் களாய், மனித நேயம் கொண்டவராய் வாழவும், நாட்டில் ஒற்றுமையுணர்வு மேலோங்கி அமைதி நிலவவும், அறிவுரை வழங்கி, நல்வழி வகுத்துத் தந்த அருளாளர். 

சுவாமிகள் சீடரான தமிழ்த்  தென்றல் திரு.வி.க. அவர்கள் தன் குரு வணக்கத்தில் பாம்பன்  சுவாமிகளைத் ''தமிழ்ப் பொழிலே, அன்பு கொழி திரையே, தெய்வத் திறங்கண்ட அறநிலையே, செகத்திலுற்ற கூம்பலற எழுகதிரே, நீதி ஓம்புக வெ ன்றுரைத் தொழுகி உலகில் வாழ்ந்த உயர் குமரகுருதாச ஒளியே போற்றி'' என்று புகழ்ந்துள்ளார்கள். சுவாமிகள் இசைத் தமிழிலும், இயல் தமிழிலும் சிறந்து விளங்கியவர். ‘இவர் வடமொழிக் கடலையும், தென்மொழிக் கடலையும் ஒருங்கே உண்ட  காளமேகன்' என்றார் திரு.வி.க. 

பல தெய்வ வழிபாட்டினைக் கண்டித்து ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கருத்துடையவர். ஆன்ம நெறிக்குத்  தடையாய் இருப்பது சாதி அபிமானமே என்று உரைத்தவர். சாதி வேறுபாடுகளை அறவே வெறுத்தவர். பொய்யினில் முனிவு கொண்டவர். சீவகாருண்யத்தைப் பெரிதும் போற்றியவர். ஒரு மூட்டைப்பூச்சி சிறுவனால் கொல்லப்பட்டதைக் கண்டு அவனைக் கண்டித்து மனம் வருந்தி அன்று பூராகவும் உணவு உட்கொள்ளாமல் இருந்தவர். இறைவன் படைப்புகள் அனைத்தும் முக்கியமானவை என்றும், உடல் உருவத்தில் வேறுபட்டாலும் உயிர் அடிப்படையில் சமம் என்று கருதியவர். 

மிகுந்த தமிழ்மொழிப் பற்றுக் கொண்டவர். வடமொழியே கலவாத தூய தமிழில் சேந்தன் செந்தமிழ் என்ற நூலை இயற்றிய வர். ''சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்'' என்று அறிவித்தவர். 'சேந்தன் செந்தமிழ்' என்ற நூலுக்கு பேராசிரியர், டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் வரைந்த முகவுரையில் கூறியதாவது: 'நுண்மாண் நுழைபுலக் கருத்துகள் பல அமைந்த நூலும், உரையும் உள்ள அமைப்பு இதுவரையில் தமிழ்மொழி வரலாற்றில் இல்லையெனலாம்'.

''இரை தேடுவதோடு இறையைத் தேடு'' என்று சுவாமிகள் அறிவுறுத்தினார்கள். சுவாமிகளின் பாடல்கள் வேதம், உபநிடதம், ஆகமம் சைவ, சமய சாத்திரம் தோத்திரம் முதலியவற்றின் நுட்பங்களைக் கொண்டன. சித்திரம், மதுரம், வித்தாரம், ஆசு எனும் நால்வகைக் கவிகளை யாத்தார்கள். ஒரு பாடலை 125 பாடலாக மாற்றி இரண்டரைக் கடிகைக்குள் ''பஞ்சவிம் சதி அதிக சதிபங்கியை'' அருளினார்கள். இவருடைய பாடல்கள் 20க்கும் மேற்பட்ட பண்களில் அமைந்துள்ளன. இவை மந்திரசக்தி வாய்ந்தவை. 

ஐந்திலக்கண அமைதியிற் பொலிவும், காவியச் சுவையும் மிக்கவை. இவற்றை உள்ளத்தூய்மையுடன் ஓதி உடற்பிணியிலிருந்தும், துன்பத்திலிருந்தும் விடுபடுவர் பலர். பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் முருகப் பெருமானால் அங்கீகரிக்கப்பட்டவை. ஓர் எடுத்துக்காட்டு: பாம்பன் சுவாமிகள் அருளிய பஞ்சாமிர்த  வண்ணப் பாடலை இரண்டு வேதியர்கள் திருச்செந்தூர் கவுண்ட மண்டபத்தில் நாள்தோறும் பாராயணம் செய்யும்போது ஒருநாள் அழகான ஓர் இளைஞன் இப்பாராயணத்தைக் கேட்டு மகிழ்ந்ததை அங்குள்ள மூதாட்டியிடம் சொன்னதாகப் பாம்பன் சுவாமிகள் 'பெருவேண்டுகோள்' என்றும் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

''பரிவாளர்கள் அங்கு ஓது ஒரு பஞ்சாமிர்த வண்ணம்
இரியா எனது உளம் நச்சு இனிதாம் என்றொரு கிழமைப்
பெரியாள் முனம் வந்து ஓதிய செந்தில் பெருமானே
வரிமாமறை இறைவா! எனை மறவேல்''.


''நான் பாடுபாட்டை நவில்பவர்க்கு நலம் நல்காய்'' என்னும் ''எனைத் தள்ளினாலும் எனை நம்பினவர்த் தள்ளேல்'' என்றும் பாம்பன் சுவாமிகள்  முருகப் பெருமானைத் துதித்து, உலகவர்க்காகவே வேண்டும் அருள்நிலை பரமாசாரியராகவும், சமுதாய மேம்பாட்டு சிற்பியாகவும் திகழ்ந்தவர். முருகப் பெருமானைக் கனவிலும், நினைவிலும் பலமுறை தரிசித்தவர். 1894ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ராமநாதபுரத்தை அடுத்த பிரப்பன் வலசை என்ற சிற்றூரிலுள்ள மயானத்தில் ஆறு அடிச் சதுரக்குழியில் 35 நாட்கள் ஊண், உறக்கமின்றி, தொடர்ந்து நிட்டை செய்து முருகப் பெருமானை நேரில் தரிசித்து அவரிடம் உபதேசம் பெற்றார். 

பாம்பன் சுவாமிகள் இந்த தெய்வீக அனுபவத்தை 'தகராலய ரகசியம்’ (1896 வருடம்) என்ற  தம்முடைய நூலில் விவரித்துள்ளார்கள். ‘‘35 நாள்காறுந் தனிநிட்டை காத்திருந்த ஞான்று கௌபீன தாரியாய் வெளிப்பட்ட இறைவன், எமக்கொரு  மொழியினுணர்த்தியருளினன்'' என்று இந்நூல் பாயிரத்தில் சுவாமிகள் கூறியுள்ளார்கள். 

மயூரவாகன சேவனம்:

அவர்களின் தூய பக்தியையும், அவர்கள் இயற்றிய ஷண்முக கவசத்தின் மகிமையையும், முருகப் பெருமான் தம் மெய்யடியார்களுக்கு அருளும் கருணையையும் மக்கள்  அறியும் வண்ணம் சென்னையில் முருகப்பெருமான் ஒரு திருவிளையாடல் புரிந்தார். உருத்ரோத்காரி ஆண்டு மார்கழித் திங்கள் 12ம் நாள் (27-12-1923) வடசென்னை, தம்புச் செட்டித் தெருவில் வேகமாக வந்த குதிரை வண்டி சுவாமிகளின் மீது மோதியதால் அவர்களின் இடைக்கால் எலும்பு முறிந்து விட்டது ரத்தப் பெருக்கோடியது. சுவாமிகள் கலங்கவில்லை. மருத்துவம் செய்து குணப்படுத்தி வாழ நினைக்கவில்லை. 

இத்துடன் உடற்பற்றும், உயிர்ப்பற்றும், உலகப்பற்றும் ஒருங்கே ஒழிந்துவிட்டன என்றும், மீண்டும் பிறவித்துன்பம் வாராது என்றும் எண்ணி முருகப் பெருமான் திருவடி மலர்களையே சிந்தித்து மகிழ்ந்தார்கள். இந்த விபத்தைக் கண்ணுற்ற சுவாமிகளின் அன்பர் சுவாமிகளைச் சென்னை அரசு பொது மருத்துவமனையில்  11ம் எண்ணுள்ள மன்றோ வார்டில் சேர்ந்தார். சுவாமிகள் 73 வயதுக்கு மேற்பட்டவர் என்பதாலும், உப்பு அற்ற உணவையே உண்பவர் என்பதாலும் அவர்களின் முறிந்த எலும்பு ஒன்று சேராது என்றும் அறுவைச் சிகிச்சையைச் செய்ய வேண்டும் என்றும் ஆங்கிலேய மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். 

மருத்துவமனையில் சேர்ந்த 11ம் நாள் இரவில் முருகப் பெருமானின் பெரிய மயில் ஒன்று தனது தோகையை நல்ல வட்ட வடிவமாக விரித்து, அழகிய வானை மறைத் தும், இதன் இடப்பக்கத்தில் உடன் வந்த மற்றொரு மயிலுடன் சேர்ந்து நடனமாடிய அழகிய காட்சியைச் சுவாமிகளுக்கு முருகப்பெருமான் காட் டியருளினான். மயில்களின் கால்கள், தரையில் பதியவில்லை. அவை பொன்மய பச்சை நிறமாக இருந்தன. இந்நிகழ்ச்சியை சுவாமிகள் ‘அசோகசாலவாசம்' என்னும் நூலில் விளங்கியுள்ளார்:

''விண் மகிழ்ந்திட, வேல்விடு வேள்மயில் கண்மகிழ்ந்து எழல் தாசற்குக் காட்டினான்; மண் மகிழ்ந்திட, மாகம் மகிழ்ந்திட எண் மகிழ்ந்த பன்னொன்றின் இராவிலே'' அம்மயூரவாகனக் காட்சியானது தன்னை விட்டு மறைதலைக் கண்டு, மீண்டும் இது போன்றொரு காட்சி எவ்வாறு கிடைக்கும் எனத் திருவருளைச்  சிந்தித்து சுவாமிகள் அழுதார். அவர் மனம் மகிழுமாறு ஓர் இரவில் செவ்வேட் பரமன் ஒரு சிவந்த நிறக் குழந்தை வடிவில் தோன்றி சுவாமிகள் படுத்திருந்த படுக்கையிலேயே தானும் தலை வைத்துக் காலை நீட்டிப் படுத்திருந்தான். 

அத்திருக்காட்சியைக் கண்ட சுவாமிகள் குழந்தையாக வந்தவன் முருகப் பெருமானே எனும் நுட்பத்தை அறிந்த பின்பு அவன் மறைந்துவிட்டான். ‘தன்னைவிட்டு நீங்கவில்லை என்று குழந்தை வடிவாய் காட் சியளித்தால் தன் உள்ளம் களிப்பு கொண்டுள்ளதாயினும், இவ்வுலகில் இறப்பேன் என்று உறுதிகொண்டு களித்துள்ள தன்னை இம்மண்ணுலகில் இருக்கும்படி செய்துள்ள பாங்கைத்தான் அறிந்திலேன்’ என்று உலக வாழ்வை எண்ணாத சுவாமிகள் முருகப்பெருமான் திருப்பெயரைப் பலமுறை  ஓதினார். 

உயிரையும், உடம்பையும் ஷண்முகனே கவசமாக இருந்து காப்பான் என்ற உறுதியுடன் ஷண்முக கவசம் பாடியருளிய சுவாமிகளின் காலே முறிந்து விட்டது என்று எண்ணி உலகம் வேலிறைவனை இழிவாகப் பேசுமோ என்றும், அவ்வாறு பேசாமல் இருப்பதற்கு என்ன தடையைக் கருதுவேன் என்றும் பெரிதும் கவலைப்பட்டார். ஆனால், அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் எக்ஸ்ரே படங்கள் எடுத்து ஆராய்ந்தபோது எலும்பின் ஒடிந்த பகுதி கூடி வருவதைக் கண்டு ஆச்சரியமுற்றனர். இன்னும் பதினைந்து நாட்களுக்குள் புண் ஆறிவிடும். 

அதுவரையிலும் மருத்துவமனையை விட்டுச் செல்லக்கூடாது என்ற நாதம் முருகப் பெருமானிடத்திலிருந்து சுவாமிகள் மகிழும்படி தோன்றியது. அம்மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த உயர் அதிகாரியான ஓர் ஆங்கிலேய பெண்மணி சுவாமிகளிடம் சென்று, ‘‘உணவில் உப்பை முற்றிலும் நீத்த தங்களின் கால் குணமாகியது பெரும் வியப்பாக உள்ளது’’ என்று அன்புடன் கூறினாள். வானம் இடிந்து தலையில் விழும்படி வம்பு வந்தாலும் அந்தக் கானமயில் முருகையன் திருவருள் கைவிட மாட்டாதே என்று தாம் அருளிய போதனையில் உறுதியாக இருந்தார் சுவாமிகள். 

பிறகு மருத்துவமனையை விட்டு தம் சீடர்கள் இல்லத்தில் தங்கினார். சுவாமிகளின் முறிந்த கால் குணமானது கண்டு அன்பர்கள் மகிழ்ச்சி கொண்டனர். முன்பு காலனை (இயமனை) உதைத்த சிவபெருமானின் மகனாக நிலை பெற்றாய் என்றும், அவனது காலை அடைக்கலம் அடைந்தவரை நன்கு காத்தருளினாய் என்றும், தனது முறிந்த காலை நன்கு குணம் பெறச் செய்தாய் என்றும் கூறி இனி எக்காலத்திலும் அவனுடைய காலைத் தனக்கு அளித்தருள்வாயாக என்றும் சுவாமிகள் வேண்டினார்.

முன்காலை உதைத்தவன் கால் முளையாய் நின்றாய் பின்காலை அடுத்த வரைப் பெரிதும் காத்தாய் என் காலை இனிது அளித்தாய்; இனி எஞ்ஞான்றும் நின்காலை எனக்கு அளி என்றான் அந்நீத்தோன் இந்த அற்புத தெய்வீக நிகழ்ச்சி, மேற்கண்ட மருத்துவமனை 11ம் வார்டில் 26-12-1981ல் டாக்டர் இரத்தினவேல் சுப்பிரமணியம் அவர்களால் திறக்கப்பட்ட கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. அக்குறிப்பின் வாசகங்கள் வருமாறு: 'பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் கால் முறிவுண்டு சென்னை பொது மருத்துவமனையில் 11வது வார்டு (மன்றோ வார்டு) 11வது படுக்கையில் 27-12-1923 அன்று சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

முருகப்பெருமான் திருவருளால் 11ம் நாள்  இரவு (6-1-1924) வளர்பிறைப் பிரதம திதியும், பூராட நட்சத்திரமும் சேர்ந்த நன்நேரத்தில் சுவாமிகள் மயில் வாகனக் காட்சி கண்டு, அறுவை  சிகிச்சை இல்லாமலே பூரண குணம் பெற்றார். அந்நாள் மயூர வாகன சேவன விழாவாக ஒவ்வோராண்டும் சுவாமிகள் காலம் தொடங்கி  விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.'' இப்பதிவுக்கல் அம்மருத்துவமனையில் 11ம் வார்டில் பாம்பன் சுவாமிகள் திருவுருவ படம் அருகில்  உள்ளதை இன்றும் காணலாம். 

இவ்விழாவைத் தொடர்ந்து கொண்டாடுவது சுவாமிகளால் 1926ல் நிறுவப்பட்ட மஹாதேஜோ மண்டல சபையினரின் கடமை என தாம் ஏற்படுத்தி  பதிவு செய்யப்பட்ட வில்சாசனத்திலும் (17-7-1926) வில் அனுபந்த சாசனத்திலும் 19-12-1927ல்  விளக்கமாகக் கூறியுள்ளார்கள். 30-5-1929 அன்று காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் யாவரும் அறியவே சுவாசத்தை உள்ளுக்கு இழுத்தார்கள். அது நிகழ்ந்தது சுக்கில வருடம் வைகாசி மாதம் அமரபட்ச சஷ்டி திதியும் அவிட்ட நட்சத்திரமும் கூடிய சுபவேளையாகும். 

மறுநாள் 31-5-1929ல் அடியார்கள் திருப்புகழ் ஓதியும், விருதுகளைத் தாங்கியும் புடைசூழ, தீவட்டி, மத்தாப்பு முதலிய ஒளி செய்ய, மிக அழகியதொரு புஷ்ப விமானத்தில் சுவாமிகள் எழுந்தருளி காலை  8.15 மணிக்கு சென்னை, திருவான்மியூர் சேர்ந்து சமாதி நிலையத்தில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்கள். அச்சமாதி நிலையத்தில் சுவாமிகளால்  நிறுவப்பட்ட மஹாதேஜோ மண்டல சபையினர் தொடர்ந்து வழிபாடு செய்து வருகின்றார்கள்.

No comments:

Post a Comment