Saturday 26 April 2014

Siva darisanam

திருமாதலம்பாக்கம்

தெய்வ பலம் பெற்ற சான்றோர்கள் நிறைந்த தொண்டை நாட்டின் திலகம் என புகழப்படும் காஞ்சிபுரம், ஏழு புண்ணிய நகரங்களில் முக்கியத்துவம் பெற்ற புனித நகரம். அந்த காஞ்சிபுரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, திருமாதலம்பாக்கம். எழிலார்ந்த சோலைகள் நிறைந்த சிற்றூரான இங்கு சோழர்கால பாணியில் சிறப்புடன் திகழ்கிறது பொன்னிறங் கொண்ட சுயம்பு திருமாலீஸ்வரர் ஆலயம். இரண்டாயிரம் ஆண்டுகள் புராதனமானது. ஈசனது அட்டவீரத்தலங்களுள் ஒன்றான திருவிற்குடி எனும் இடத்தில் ஜலந்திரன் எனும் அசுரனை ஈசன் அழித்தார். 

அந்த ஜலந்திரன் தோன்றியது  இந்த திருமாதலம்பாக்கத்தில்தான். திருமந்திரத்தில் ‘சிவனொடு ஓங்கும்...’ என்ற பாடலில் இத்தல ஈசனைப் பாடியுள்ளார், திருமூலர். திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற பெருமை கொண்டது. காஞ்சி புராணத்தில் ‘ஒருபொரு கொச்சகம்’ எனும்  பகுதியில் இத்தலத்தின் பெருமை 26 பாடல்களில் விளக்கப்பட்டுள்ளது. இத்தல ஈசனை வழிபட்டு ஜலந்திரன் அரிய வரங்கள் பல பெற்றான். இந்த ஈசனை திருமாலும் ஸஹஸ்ரநாமங்களால் அர்ச்சனை செய்து வழிபட்டுள்ளார். 

நான்முகன், அஷ்டதிக்பாலகர்கள், ரேணுகாதேவி, பரசுராமர், ஜமதக்னி, கார்த்தவீர்யன் போன்றோர் வழிபட்டு பல அரிய வரங்களை பெற வழிவகுத்துத் தந்த தலம். கிரக தோஷம், புத்திர தோஷம், வாஸ்து தோஷம், ப்ரம்மஹத்தி தோஷம், நோய், திருமண தோஷம், மாங்கல்ய தோஷம், ஷஷ்டாஷ்டக தோஷம், 
சர்ப்ப தோஷம் முதலானவை இத்தல ஈசனை தரிசித்தாலேயே நீங்கும் என்பது ஐதீகம். துளசி, நெல்லி, அகத்தி போன்றவை இங்குதான் தோன்றின என்பது வியக்க வைக்கும் தகவல். இந்திரனின் சாபம் விலகிய தலம்.

திருமால்+தலம்+பாக்கம் என்று பிரித்து திருமால் இங்கு விரும்பி வந்து உறையும் தலம் என்றும், திருமால் பெருவிருப்பினொடு ஈசனை இங்கு வழிபட்டு மனக்கவலை அகன்று மனோபலம் பெற்ற தலம் என்றும் தலபுராணம் கூறுகிறது. திரு+மா+தலம்+பாக்கம் என்று பிரித்து, திருமகள் மனமகிழ்ந்து உறையும் தலம் என்றும், மங்களம் நிறைந்த மாபெரும் தலம் என்றும் பொருள் கூறுவர். கருவறையில் திருமால் வழிபட்ட ஈசன், கோடி சூர்ய பிரகாச ஒளி கொண்டு பொன்னிறப் பொலிவுடன் காட்சி தருகிறார். 

எனவே, இவரை பொன்னிறம் கொண்ட திருமாலீஸ்வரர் என்றும் அழைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். இத்தலத்தில் அருளும் ஸ்ரீநிவாசப் பெருமாள் தன்வந்திரி பகவானின் அம்சம் கொண்டவராக விளங்குகிறார். பல அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்ட பெருமாள் நம் உடலில் ஏற்படும் நோய்களை தீர்த்து வைத்து அருள்கிறார். இதற்கு ஆதாரமாக பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால் நீல நிறமாகி விடுவதைக் காணலாம். பாற்கடலில் பள்ளி  கொள்ளும் நீலமேக ச்யாமளனை இத்தலத்தில் நீலமேகனாகவே தரிசிக்கும் வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது. 

இந்த பெருமாளுக்கு தொடர்ந்து 11 ஏகாதசிகள் அல்லது 11 சனிக்கிழமைகளில் அபிஷேகம் செய்து அந்தப் பாலை பிரசாதமாக உட்கொண்டால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.ஆலயத்தின் தெற்கே உள்ள வெளிச் சுவரில் மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படும் கல்வெட்டிலிருந்தே ஆலயத்தின் தொன்மையை அறிய முடிகிறது. திருப்பணிக்காக பூமியைத் தோண்டியபோது எலி வாகனம் இல்லாமல் விநாயகர் மற்றும் சப்தமாதர்கள் திருவுருவங்கள் கிடைத்திருக்கின்றன. வேண்டும் வரம் தரும் திருமாலீஸ்வரரையும், திருமாலையும் தரிசித்து வளமான வாழ்வருள பிரார்த்தனை செய்வோம்.

No comments:

Post a Comment